திங்கள், 10 பிப்ரவரி, 2014

திருவள்ளுவர் பற்றி ...!

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்)

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில்
பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31
 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால்,
 எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.
 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும்,
 விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர்,
 வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி,
 மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி,
 மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ,
 அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

தமிழால் தழைக்கிறது செளராஷ்டிரம்!

வடமொழிக்கு முன்பு நிலவிய பிராகிருத மொழிகள் ஐந்தில் ஒன்று "ஸெளரஸேனி' மொழியாகும். அத் தொன்மையான மொழியிலிருந்து கிளைத்த மொழியே செüராஷ்டிர மொழியாகும். இம்மொழிக்கு சொந்த எழுத்து இருப்பினும், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இச்சிறிய மொழியினரில் சில ஆயிரம் பேர் மட்டுமே சொந்த எழுத்தினை அறிவர். பெரும்பாலோர் பேச்சு மொழியாகவே கொண்டுள்ளனர். ஆனால், பொது இடங்களில் இம்மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர். தங்கள் மொழி இலக்கியங்களை தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தியே வெளியிட்டும், தங்கள் மொழி, சமூக இதழ்களில் தங்கள் மொழி எழுத்துகளுடன் தமிழ் எழுத்துகளையும் சேர்த்தே சுமார் 100 ஆண்டு காலமாக பிரசுரம் செய்தும் வருகின்றனர்.
உதாரணமாக, 1921-ஆம் ஆண்டில் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் வரலாறு, 1958-இல் செüராஷ்டிர ஸங்க்ரஹ ராமாயணம், 2013-இல் கவி வேங்கடசூரியின் ஸங்கீத ராமாயணொ - இம் மூன்றும் தமிழ் எழுத்திலேயே பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இம்மொழிக்கென வெளிவரும் "பாஷாபிமானி' எனும் மாத இதழில் தலையங்கம் செüராஷ்டிர எழுத்துடன் தமிழ் எழுத்திலும் பிரசுரமாகிறது. இம்மொழி இலக்கியங்களுக்கு தமிழில் உரை எழுதப்படுகிறது. ஆக, செளராஷ்டிர மொழி இலக்கியங்கள் காப்பாற்றப்படுவதற்கு தமிழ் மொழி - தமிழ் எழுத்தின் உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியால் இன்னொரு மொழியின், அதுவும் ஒரு சிறிய மொழியின் இலக்கியங்கள் காப்பாற்றப்படுகின்றன என்பது தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கிறதே...!


தமிழால் தழைக்கிறது செளராஷ்டிரம்!

வெள்ளி, 24 மே, 2013

ஆர்கிமிடீஸ் தத்துவம் -பல அறிவியல் கண்டுபிடிப்புகளை அனாயசமாய்க் கண்டவன் தமிழன்!



கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்க
ள்,மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை(நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்.
 
 
 நன்றி : தமிழறிவு

கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

(தமிழ் மொழியில் கிரந்த எழுத்து பயின்றுவருவது தொடர்பில் அவ்வப்போது பல்வேறு விவாதங்கள் எழுகின்றன. அவ்வாறான விவாதங்களுக்குத் தெளிந்த விளக்கமாக; முடிந்த முடிபாக இக்கட்டுரை அமையும். மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க் கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை மார்ச்சு 2008 'உங்கள் குரல்' இதழில் வெளிவந்தது.)


கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு) புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன. ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப் புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.


பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன் தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும் தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.

அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.

கிரந்த எழுத்து வேண்டுமென்பது ஏன்?

கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள் முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.

1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும் இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.

2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன் எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.

இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.

சமய நூல்களும் கிரந்த எழுத்தும்
கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும், இதில்வரும் இடப்பெயர்களும் ஆட்பெயர்களும் வடமொழி சார்ந்தவை. கம்பர் காலத்தில் கிரந்த எழுத்துகள் இருக்கவே செய்தன. இருந்தும், அறவே கிரந்த எழுத்துகள் இல்லாமல் ஏறத்தாழ பன்னீராயிரம் பாடல்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே கம்பர் பாடியுள்ளார். அதில் வந்திருக்க வேண்டிய கிரந்த எழுத்துகளுக்கு மாற்றாக தமிழ் எழுத்துகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால், அந்த இலக்கியத்தைப் படிப்பதிலும் சுவைப்பதிலும் எந்த சிறுதடையும் ஏற்பட்டுவிடவில்லை. இதுபோலவே, பிறமொழி ஒலிகளைக் கொண்ட எந்த நூலையும் தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி வெளியிட முடியும்; அவற்றைப் படித்துச் சுவைக்கவும் முடியும்.
சமயஞ்சார்ந்த பெயர்களும் கிரந்த எழுத்தும்

பல்வேறு சமயங்களைச் சார்ந்திருக்கும் தமிழர்கள் தங்கள் சமயஞ்சார்ந்து வைத்துக்கொண்டுள்ள பெயர்களை எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை என்ற கருத்தும் பொருந்துவதாய் இல்லை. கமபர் வடமொழிப் பெயர்களை ஆண்டிருப்பது போலவே, இப்போதும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். (எ.கா: இராமன், இலக்குவன், சீதை, இராவணன், விபீடணன்) கம்பராமாயணத்தில் மட்டுமின்றி அரபு நாட்டில் பிறந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் பாடிய உமறுப் புலவரின் 5027 படல்களைக் கொண்ட சீறாக்காவியம் அறவே கிரந்த எழுத்துகள் இன்றித் தமிழ் எழுத்துகளாலேயே பாடப்பட்டுள்ளது. அதில் வரும் அரபுமொழிச் சொற்களும் பெயர்களும் தமிழ் எழுத்துகளாலேயே எழுதப்பட்டுள்ளன.

சமயஞ்சார்ந்த பெயரைத் தமிழில் எழுதலாம்

வடமொழிப் பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழிலேயே பெயர்வைக்கும் விருப்பமும் போக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. தமிழில் பெயரிடுவோம் என்ற கொள்கையுடன் பல இயக்கங்கள் அந்த மாற்றத்தை மேலும் வளர்த்தும் வலுப்படுத்தியும் வருகின்றன. எனவே, வடமொழிப் பெயர்களையே வைத்தாக வேண்டும் என்ற நிலை வருங்காலத்தில் முற்றாக மாறிவிடக்கூடும். சமய அடிப்படையிலான பெயர்களைக்கூட வடமொழி தவிர்த்து நல்ல தமிழில் வைக்க முடியும். கிருஷ்ணன் என்பதைக் கண்ணன் என்றும், விஷ்ணு என்பதை மாலவன் என்றும், லஷ்மி என்பதைத் திருமகள் என்றும், சரஸ்வதி என்பதைக் கலைமகள் என்றும் தமிழிலேயே வைத்துக்கொள்ள முடியும். ஷண்முகம் என்பதை ஆறுமுகம் என்றும், தட்சிணாமூர்த்தி என்பதை அருள்வேந்தன் என்றும் அதே பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர்களும் உள்ளனர். எனவே, சமயஞ்சார்ந்து பெயர்வைக்கக் கிரந்த எழுத்துகள் கட்டாயத் தேவை அல்ல.

தமிழைத் தமிழாக்குவோம்

எனவே, உண்மைகளையும், தமிழ்நலனையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்து, தமிழில் உள்ள கிரந்த எழுத்து வழக்கைப் படிப்படியாக மாற்றித் தமிழைத் தமிழாகவே நிலநிறுத்தத் தமிழர் யாவரும் இன்றிணைந்து செயல்படுவதே நமது தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். பழகிப் போனதால் மாற்றம் சிறிது கடினமாகத் தோன்றலாம்; படிப்படியாகச் செய்தால் அது இயல்பாகிவிடும்; இனிதுமாகிவிடும்.

பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?
உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக் கொள்வதோ அல்லது இல்லாத புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்வதோ ஒருபோதும் இல்லை.

காரணம், தங்கள் மொழியின் இலக்கண வரம்புகளையும் மரபுகளையும் சிதைத்துவிட்டு, பிறமொழி ஒலிப்பைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற மனப்போக்கே எதிர்மறையானதாகும். பிறமொழி ஒலிக்காக நமது மொழியைச் சிதைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பிறமொழிக்குரியவர்களே விரும்பவோ எதிர்பார்க்கவோ மாட்டார்கள். அவர்களே எதிர்பார்க்காத மதிப்பை, நமது சொந்த மதிப்பைக் கெடுத்தாகிலும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று எண்ணுவது உண்மையில் மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மையாகும். தன்மதிப்புள்ள எவரும் இதனை ஏற்கமாட்டார்.

பிறமொழி ஒலிகள் எப்படி எழுதப்படுகின்றன?


தமிழ் என்ற சொல்லை உலகப் பெருமொழியான ஆங்கிலத்தில் 'டமில்' (Tamil) என்றுதான் எழுதமுடியும். அவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை; நாமும் அதனைக் குறையாகக் கருதுவதில்லை. அரபு மொழியில் எகர ஒகரங்கள் இல்லை. எனவே, அந்த மொழியில் அமெரிக்கா, மலேசியா என்ற நாட்டுப் பெயர்களை ஒலிப்பு மாறாமல் எழுத முடியாது. அரபியர்கள் இவற்றை 'அமிரிக்கா' என்றும் மலீசியா என்றுந்தான் எழுதுகிறார்கள். இதற்காக, அரபியர்கள் கலவைப்படுவதில்லை.

எனவே, எந்த மொழியும் எந்த மொழிக்காகவும் செய்யாத இந்த வேலையை, நாம் நம் தமிழ்மொழியைச் சிதைத்தாவது மற்ற மொழிகளுக்காகச் செய்யவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய கருத்தாகும்.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத வேதமொழிகளைத் தமிழில் ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று. அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப் புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை. அதற்குப் பிறகும், உமறுப் புலவர், சேகனாப் புலவர், வீரமாமுனிவர் போன்ற பலரும் கிரந்த எழுத்தை ஆளவில்லை. கடந்த 3 நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும் இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.

எனவே, கட்டாயத் தேவையின்றியும், பிறமொழியினரே எதிர்பார்க்காத ஒன்றைப் பிறமொழிக்குச் செய்யும் வேண்டாத முயற்சிக்காகவும், அப்படியே முயன்றாலும் அதனை முழுமையாகச் செய்யவியலாத நிலையிலும்; நம் தமிழ்மொழியின் அமைப்பையும் செம்மையையும் கெடுக்கலாம் – கெடுக்க வேண்டும் என்று எண்ணுவதும்; அதற்காக வாதமும் பிடிவாதமும் செய்வது சரியன்று.

வழக்கிலிருக்கும் கிரந்த எழுத்துப் பயனீட்டைக் குறைக்கும் முயற்சியில் தமிழுணர்வாளர்கள் ஈடுபட்டுள்ள காலத்தில், அவற்றை வலிந்து மேலும் திணிக்க முயல்வது, அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்வியாளர்கள் அவ்வாறு செய்வது ஆக்கமான நடவடிக்கையன்று. அது, வீண் குழப்பத்துக்கும் வேற்றுமைக்கும் போராட்டத்துக்குமே வழிவகுக்கும்.

கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்?
தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள். இது, நுனிப்புல் மேய்ந்ததொரு கருத்து. தொல்காப்பியர் வடசொல்லைப் பயன்படுத்துமாறு எங்கும் கூறவில்லை.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்ற அவரது நூற்பாவின் பொருள்:-
வடசொல் என்பது வட எழுத்தை (ஒலியை) முற்றும் நீங்கித் தமிழ் எழுத்துகளால் உருவான சொல்லே என்பதுதான். பிறமொழிச் சொல்லை எப்படித் தமிழில் எழுதுவது என்று கூறியதை பிறமொழிச் சொல்லை தமிழில் கலக்கவேண்டும் என்று கூறியதாகக் கொள்வது கதைத்திரித்தல் ஆகும்.

நமக்கு பிறமொழிப் பேசும் மக்களுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த மக்களது பெயர்களையும் அவர்கள் தங்கள் மொழியில் வைத்துள்ள இடப்பெயர்களையும் எழுதும் தேவையும் ஏற்படவே செய்யும். அந்தப் பெயர்கள் நமது மொழியில் இல்லாத ஒலிகளைக் கொண்டிருக்கலாம். எனவே, அந்த மொழிப் பெயர்களை நமது மொழியில் எழுத ஒரு முறையை வகுத்துரைப்பது இக்கணியின் கடமையாகும்.

எனவேதான், தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழில் எழுதும் முறையை வழங்கினார். ஆனால், இந்த நூற்பாவின் தெளிவான செய்தி பிறமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துகளால் தமிழ் இலக்கணப்படி புணர்ந்து எழுத வேண்டும் என்பதே. கிரந்த எழுத்தாக்கம் போன்ற நடவடிக்கையைத் தொல்காப்பியர் முன்னறிந்து தடுத்திருக்கிறார் என்பதே உண்மை. இதையும் மீறி கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து உருவானது.

நன்னூல் என்ன சொல்கிறது?
கிரந்த எழுத்து உருவாகி 6 நூற்றாண்டு கடந்து கி.பி12ஆம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவரும் வடசொல்லத் தற்சமம் (ஒலிமாறாமல் தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றும்; தற்பவம் (ஒலி மாற்றி தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றுதான் பிரித்து இலக்கணம் வகுத்தாரே அன்றி, அப்போதிருந்த கிரந்த எழுத்தைப் பயன்படுத்தும்படியோ, பயன்படுத்தும் முறையையோ கூறவில்லை.

தற்சமம், தற்பவம் என்றால் என்ன?
தமிழிலும் சமற்கிருதத்திலும் உள்ள பொதுவான எழுத்தொலிகளைக் கொண்ட அதாவது ஒலிக்காக எழுத்துகளை மாற்றத் தேவையில்லாத சமற்கிருதச் சொற்களே தற்சமம் எனப்படும். தமிழிலும் சமற்கிருதத்திலும் சமமான ஒலிகளைக் கொண்ட எழுத்துகளால் ஆன சொற்கள் என்பது இதன் கருத்து.

தமிழில் இல்லாத சமற்கிருதத்தில் மட்டும் உள்ள எழுத்தொலிகள் கொண்ட சமற்கிருதச் சொற்களில் உள்ள சமற்கிருத ஒலிகளை மாற்றி தமிழ் எழுத்துகளையே கொண்டு எழுதப்படும் சொற்களே தற்பவம் எனப்படும். தமிழில் இல்லாத சமற்கிருத ஒலிகளுக்கு ஈடாகத் தமிழ் ஒலிகள் பாவிக்கப்பட்ட சொற்கள் என்பது கருத்து.

தற்சமம், தற்பவம் ஆகிய இரண்டிலுமே கிரந்த எழுத்து வராது. கமலம், கல்யாணம் போன்ற வட சொற்கள் எழுத்தொலி மாற்றப்பட்டாமையால் இவை தற்சமம் ஆகும். வருடம், புட்பம் போன்ற வடச்சொற்களில் உள்ள சமற்கிருத ஒலி தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டிருப்பதால் இவை தற்பவம் ஆகும்.
மனமார்ந்த நன்றிக்குரியவர்: -
நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்
'உங்கள் குரல்' 2008 மார்ச்சு மாத இதழ்
மலேசியா.
 
 



கரீபியநாடுகளில் தமிழர்!! நன்றி: தமிழறிவு

கரீபியன் பகுதி அமெரிக்கக் குடியரசு, இலத்தின் அமெரிக்க நாடுகளின் அருகில் இருக்கிறது. இப்பகுதியில் டிரினிடாட், டொபாகோ கயானா, சூரிநாம், ஜமைக்கா, கிரெனடா, குவாடிலோப், மார்தினீக், அங்குயிலா போன்ற நாடுகள் இருக்கின்றன. வெளிசூலா கடற்கரை அருகிலேயே டிரினிடாட், டொபாகோ முதலிய இரண்டு தீவுகள் இருக்கின்றன. இவை தென் அமெரிக்கத் தலைநிலப்பரப்புப் பகுதியில் இருக்கின்றன. கயானாவின் மேற்கே வெனிசூலாவும், கிழக்கே சூரிநாமும், தெற்கே பிரேசில் நாடும் இருக்கின்றன. டச்சு கயானா என்று அழைக்கப்படும் சூரிநாம், பிரேசில், கயானா அருகில் இருக்கிறது. கரீபியன் பகுதியில் பரப்பளவில் மூன்றாவது இடத்தை ஜமைக்கா பிடித்திருக்கிறது. ஜமைக்கா, கியூபா நாட்டின் அருகில் இருக்கிறது.

தமிழர் குடியேறிய வரலாறு :

கரீபிய நாடுகளில் தமிழர்களுக்கு முன்பாக தோட்டங்களில் ஆப்ரிக்கர்களே வேலை செய்து வந்தனர். 1834-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆப்ரிக்கர்களின் அடிமைவாழ்வு முடிந்து தோட்டங்களைவிட்டு வெளியேறியவுடன், வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இந்தியாவிலிருந்து பிரஞ்சு குடியேற்றங்களுக்கு நிறையபேர் அனுப்பப்படுவதை கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள் தாமும், இந்தியாவிலிருந் தொழிலாளர்களை இறக்குமதி செய்தனர். இதன் விளைவாக 1938-ஆம் ஆண்டு இந்தியக் கூலிகள் கயானாவுக்கு அழைத்துவரப்பட்டனர். பிறகு 1845-ஆம் ஆண்டு டிரினிடாட் டுபாக்கோவிலும், 1873-ஆம் ஆண்டு சூரிநாம், ஜமைக்கா நாடுகளுக்கும் இந்தியக் கூலிகள் கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு வந்திறங்கிய இந்தியக் கூலிகள் சிலர் இத்தீவுகளிலிருந்து கிரானடா நாட்டிற்கும் சென்றனர். கயானாவிலிருந்து இரண்டு பெரிய தோட்ட முதலாளியான ஜான் கிளாட்ஸ்டோன், கிளினெல்பிரபு என்பவரின் துணையோடு இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டுவரத் தொடங்கினார். இதன் பயனால் 156 ஒப்பந்தக் கூலிகள் இந்தியாவிலிருந்து கிளம்பி ஹெஸ்பரஸ் என்னும் கப்பலில் 1838-ஆம் ஆண்டு கயானாவில் வந்து இறங்கிய கூலிகள் மொத்தம் 156 பேர். அதே மாதத்தில் விட்பை என்னும் கப்பலும் 263 கூலிகளைக் கொண்டு வந்து இறக்கியது. முதற் கப்பல் கொண்டு வந்த கூலிகளைக் தோட்ட முதலாளியான கிளாட்ஸ்டோன் டெமராரா நதிக் கரையில் உள்ள வி.எம்.வூப், வீடஸ்டீன் என்ற தோட்டங்களுக்கும் எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள அன்னாரி ஜ"னாவிற்கும் அனுப்பி வைத்தார். விட்பை ஏற்றி வந்த கூலிகளை டெமராராவில் உள்ள பெலிவ்யூ என்னும் தோட்டத்திற்கும், எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள ஹைபரி, வாடர்லூ என்னும் தோட்டங்களுக்கும் அனுப்பி வைத்தார். இவ்வாறு 1838-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தியக் கூலிகளின் கயானா வருகை 1917-ஆம் ஆண்டோடு முடிவடைந்தது. இந்த என்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வந்த கூலிகள் பலர் மேற்கிந்தியத் தீவுகளான டிரினிடாட், ஜமைக்கா, செயிண்ட் லூசியா, குவாடிலோப், மார்த்தினிக்கிற்கும், கயானாவின் கிழக்கில் உள்ள சூரிநாமிற்கும் அனுப்பப்பட்டனர். 1838-ஆம் ஆண்டு தொடங்கி 1917-ஆம் ஆண்டு வரை கயானாவிற்கு மட்டும் வந்த இந்தியர்களின் தொகை 2,38,979 ஆகும்.

டிரினிடாட் :

டிரினிடாட்டிற்கு முதன் முதலாக 1845-இல் இந்தியர்கள் வந்து குடியேறினார்கள். பேட்டல் ரோசாக் எனும் கப்பலில் 1845-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாள் போர்ட் ஆப் ஸ்பைன் துறைமுகத்தில் முதலாவது வந்த 225 இந்தியர்கள் இறங்கினார்கள். இந்தியர்கள் முதல் முதலாக டிரினிடாட்டிற்கு வந்த தினம் முதல் முறையாக 1978-இல் கொண்டாடப்பட்டது.

ஜமைக்கா :
1845-ஆம் ஆண்டு மே திங்கள் 9-ஆம் நாள் 200 இந்திய ஆண்கள், 28 இந்திய பெண்கள், 16 சிறுவர்கள் செயிண்ட் கேதரைனிலுள்ள பழைய துறைமுகத்தில் முதன் முதலாக வந்திறங்கினார்கள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 4,550 இந்தியர்கள் ஜமைக்காவில் வந்து குடியேறினார்கள். 1845-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே 36,412 இந்தியர்கள் ஜமைக்காவிற்கு வந்து குடியேறினார்கள்.

சூரிநாம் :

தென் அமெரிக்கத் தலை நிலப்பரப்பிலிருக்கும் சூரிநாம் மட்டும் டச்சுக்குடியேற்றப் பகுதியாக இருந்தது. 1853-1939 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்துகொண்ட 74,000 கூலிகள் சூரிநாமிற்குக் கொண்டுவரப்பட்டனர். இதில் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் 46% பேர்கள்.

கிரானடா :

1857-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே சுமார் 2,750 இந்தியக் கூலியாட்கள் இத்தீவிற்கு வந்து குடியேறினார்கள். இவர்கள் பிற கரீபியன் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டனர். ஆனாலும் தேவைக்கேற்ப மிகுதியான கூலியாட்கள் கிடைக்காததால், பல கரும்புத் தோட்டங்கள் வளர்ச்சியடைந்த போதிலும், பொதுவாக இத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் தோன்றவில்லை.

மார்டினிக்தீவு :

காரைக்கால், பாண்டிச்சேரி பகுதியிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக 10,063 பேர் 1874-ஆம் ஆண்டில் மார்டினிக் சென்றுள்ளனர். இங்கிருந்து குவாடலோப் முதலிய தீவுகளுக்கும் சென்றுள்ளனர்.

தமிழரின் இன்றைய நிலை

சமயம் :

கரீபிய நாடுகளில் மாரியம்மன், காளி, மதுரை வீரன் கோயில்கள் கட்டாயம் இருக்கும். ஏனெனில் தொழிலாளர்களாக சென்ற தமிழர்களில் முக்கால்வாசிபேர் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து சென்றவர்கள். மற்றும் சிலர் மதம்மாறி கிறிஸ்தவர்களானார்கள். ஒவ்வொரு தோட்டத்திலும் இத்தெய்வங்களைக் காணலாம். இந்துக் கோயில்களைக்கூட "சர்ச்" என்றே அழைக்கின்றனர். பெரும்பான்மையான கோயில்கள் சர்ச் பாணியிலேயே இருக்கின்றன. சிலைகளுக்கு பதிலாக படங்களே இருக்கின்றன. 'சேவலை' காவு கொடுக்கும் வழக்கமும்; வேலாடும் வழக்கமும் இருக்கின்றன. சாதிப்பேய் அங்கேயும் இருக்கிறது. கோவிலில் சிலரை உள்ளே அனுமதிப்பதில்லை. கயானாவில் பெர்பீஸ் பகுதியில் இவ்வழக்கம் இருப்பதாக ஈசா. விசுவநாதன் தெரிவிக்கிறார். மாரியம்மன் தாலாட்டு, சிலக்குத்து என்னும் நூலிலுள்ள பாடல்களை பாடுகின்றனர். ஒரு வரியை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் பின்பற்றும் கிருத்துவ முறை காணப்படுகிறது. பக்தர்களுக்கு சுண்டல், வடை உண்டு.

சாமிமீதேறப் பெற்றவர் 'வெறியாடும்' வழக்கம் இருக்கிறது. அப்போது 'குறி'யும் சொல்லப் படுகிறது. நோயுற்றோருக்கு மந்திரம் ஜெபித்து, தண் ர் தெளித்து வேப்பிலை அடிப்பதோடு, நாட்டு மருத்துவமும் செய்கின்றனர். இத்தகைய கோயில்களுக்கு எல்லோரும் வருகின்றனர். கொரன்டீனிலுள்ள ரோஸ்ஹால் கோயிலை நடத்துபவர் ஓர் ஆப்ரிக்கர்; ஹெர்ஸ்டெலிங் கோயிலில் குறிசொல்பவர் ஒரு முஸ்லீம், மதராசிகள் (தமிழர்) நடத்தும் இக்கோயில்கள் வெறும் வழிபாட்டுக் கோயில்களாக இல்லாமல் நோய் தீர்க்கும் மருத்துவ நிலையங்களாகவும் உள்ளன. கிரானடாத் தமிழர்கள் அனைவரும் கிருத்துவர்களாக மாறி விட்டனர். சூரிநாமில் இந்துக்கள் வட இந்திய முறைப்படி வழிபாடு செய்கின்றனர். ஜமைக்கா, குவாடலுப் போன்ற நாடுகளில் மதம்மாறி விட்டாலும் ஒவ்வொரு நாட்டிலும் முறையே 500 குடும்பங்கள் இருப்பதாக 1987-ஆம் ஆண்டு கணக்கெடுத்துள்ளனர். மார்ட்டினிக் தீவில் இன்றும் ஏராளமான தமிழர்கள் தமிழக முறைப்படி வழிபட்டு வருகின்றனர். இந்துக் கோயில்கள் மௌலின், கிராடிஸ், மாகௌபா முதலிய ஏழு இடங்களில் இருந்ததாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார். 16 அடி உயரத்தில் இலிங்கம் மௌலின் கோயிலில் இருந்ததாக தெரிவிக்கிறார். மார்ட்டினிக்கில் தமிழக முஸ்லீம்களும் பெருமளவு குடியேறி இருந்தனர். நாகூர் மீரான் ஆண்டவருக்கு அங்கு ஒரு நினைவு பள்ளி இருந்ததாக வின்சென்ட் சாய்பு தனிநாயகம் அடிகளிடம் தெரிவித்துள்ளார் சாயுபு கூட வின்சென்ட் ஆகியிருப்பதிலிந்து நிலமையை உணரலாம்.

உணவு-உடை-தகவல் தொடர்பு:

பெரும்பாலான பெண்கள் இன்று நீக்ரோக்கள் உடையையும், கௌனையுமே அணிகின்றனர். ஆண்கள் வேட்டி கட்டும் பழக்கமே இல்லை. அமெரிக்க உடைகளே வழக்கில் இருக்கின்றன. உணவும்கூட ஆங்கில, பிரஞ்சு முறைப்படி இருந்தாலும் சமயசடங்கு நேரத்தில் மட்டும் சுண்டல், வடை முதலியவை செய்யப்படுகின்றன. காய்போட்டு காய்ச்சும் குழம்பை 'கொலம்போ' என்று அழைக்கின்றனர். புலவு, பிரியாணிக்கு கரீபியர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், முக்கிய உணவிடங்களில் கூட பிரியாணிக்கு செல்வாக்கிருப்பதாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார். இந்தியப் படங்களை வீடியோ நாடாக்கள் மூலம் பார்த்து வருகின்றனர். கரீபிய நாடுகளில் தமிழ் இதழ்கள் எங்கும் நடத்தப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கரீபிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் பலரும் படிப்பறிவில்லாத கிராமப்புற தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரம் போக மற்ற விடுமுறை காலங்களில் தமிழகத்தில் தாங்கள் பார்த்து கேட்டு அனுபவித்த நாடகங்களை அங்கு நடத்தியதை பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அருணாசல கவிராயரின் இராமநாடகம், தேசிங்குராசன் நாடகம், இரண்யன் நாடகம், அல்லாபாஷா நாடகம் போன்றவையும், இராமாயண, மகாபாரத கிளைக் கதைகளை நடித்ததையும் டி.டபிள்யூ.டி கொமின்ஸ் தம் நூலில் தெரிவித்துள்ளார். தமிழர்கள் பாடிய பல நாட்டுப்பாடல்களின் மெட்டுக்களை ஆப்ரிக்கர்கள் தங்கள் கிரியோல் மொழிப் பாடல்களில் கேட்கலாம். சில பாடல்களின் இறுதி அடிகளில் சின்னமுத்தம்மா, பெரியமுத்தம்மா என முடிவதிலிருந்து அறிகிறோம்.

தமிழ்மொழியின் நிலை

கரீபிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இன்று யாருக்கும் தமிழ் தெரியாது. ஆங்கிலம், பிரஞ்ச், ஸ்பானிஷ், கிரியோல் பேசுபவர்களாக மாறிப்போய் விட்டனர். தமிழர்களுடைய பெயர்களை எழுதிய பல்வேறு நாட்டு தோட்ட முதலாளிகள் அவரவர் மொழிக்கேற்ப மாற்றி எழுதி வைத்துள்ளனர். அதை மாற்றாமல் பல தமிழர்களும் அப்படியே வைத்துக் கொண்டுள்ளனர்.ராம்சமி சின்னபேன் - ராமசாமி சின்னப்பன்

மரியாய் - மாரியம்மா

வெள்ளினி - வள்ளி

-என மாறி இருக்கிறது. இந்துக்களாக இருப்பவர்கள் கூட தங்கள் பெயரின் பின் ஜான், ஜோசப் முதலிய கிருத்துவப் பெயர்களுடனே இருப்பது வியப்பாக இருக்கிறது. கயானாவில் தமிழர்கள் 60 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். கங்காராம், ரோஸ்ஹால், ஆல்பியன் போன்ற பெர்பீஸ்-கொரன்டீன் பகுதியில் உள்ள ஊர்களிலும், மேற்கு டெமராராவில் உள்ள ஸ்டுவர்ட் வில்லிலும், ட்ரையம்பிலும் நூறுகுடும்பங்கள் இருப்பதாக விசுவநாதன் தெரிவிக்கிறார்.

கல்வி நிலை :

"தம் தாய்மொழியை யார் மறக்கிறார்களோ அவர்கள் தம் பண்பாட்டையும் மறக்கின்றார்கள்" என்று கயனாநாட்டு நோயல் மெனீஸ் கூறுகிறார். இன உணர்வையும், மொழியையும் இழந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாட்டு மொழியைதான் படிக்கின்றனர். மொழி இழந்ததால் அவர்களிடம் இலக்கியமும் போய்விட்டது. ஆப்ரிக்கர்கள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட போதும் தங்கள் வாய்மொழி இலக்கியத்தை விடாமல் இருந்ததை தமிழர்கள் இனியாகிலும் உணரத்தான் வேண்டும்.

அமைப்புக்கள் :

ஜமைக்காவில் மட்டும் 8 இந்திய அமைப்புக்கள் இருக்கின்றன. மற்ற நாடுகளின் விபரங்கள் அறிய முடியவில்லை.

தமிழர் சாதனைகள்
கயானாவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்று விளங்கும் ஒருசிலரில் திரு.லெஸ்வி முத்து என்னும் தமிழர் குறிப்பிடத்தக்கவர். இவர் ஜார்ஜ் (தலைநகரம்) டவுனில் மருத்துவராக உள்ளார். திரு. சாமி என்பவர் வியாபாரத் துறையில் செல்வாக்கு பெற்றிருப்பதோடு, இந்த நாட்டில் உள்ள லட்சாதிபதிகளில் ஒருவராக திகழ்கிறார். கல்வித்துறையில் டாக்டர்.ஜே.ஆர் ராமசாமி, கயானாப் பல்கலைக் கழகத்தில் உயிர்நூல் துறையில் பணியாற்றுகிறார் இவருடைய தம்பி டாக்டர் ஹெர்னன் ராமசாமி என்பவர் செல்வாக்குள்ள மருத்துவர்களில் ஒருவராக கொரன்டீன் பகுதியில் இருக்கிறார். அரசு அதிகாரியாக வேலையில் இருக்கும் ஒருநபர் ஜேம்ஸ் நாயுடு ஆவார்.

ஜமைக்காவில் 1950 வரை காய்கறிகளின் ஏகபோக உரிமை தமிழர்களிடமே இருந்தன. ஜமைக்கா பாராளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்/தொழில் புரிவோர் விபரங்கள் :

கயானாவில் வாழும் தமிழரில் 85% விழுக்காட்டினர் தோட்டங்களிலும், சிற்றூர்களிலும் வாழ்கின்றனர். பொறியியல் வினைஞர்களாகவும், நர்சு, ஆசிரியர்களாக சிலர் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாழ்கின்றனர். நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளின் காரணமாக அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் சென்று விட்டதாக இங்குள் தமிழர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் குறைந்தது ஒருவராகிலும் அமெரிக்காவிலோ கனடாவிலோ, பிரிட்டனிலோ வாழ்ந்து வருகின்றனர். சூரிநாமில் சரபாச்சா, நிக்கெரி மாவட்டங்களில் சிறுவிவசாயிகளாகவும், ஏற்றுமதி-இறக்குமதி தொழிலிலும் இவர்களின் பங்கு உள்ளது. ஜமைக்காவில் விவசாயத்திலும் வியாபாரத்திலும் இருக்கின்றனர். கிரனடாவில் கரும்புத் தோட்டங்களி பணிபுரிகின்றனர். கரீபிய நாடுகளில் தமிழர்கள் பண்பாட்டை முதலில் வட இந்தியரிடம் இழந்தனர். பின்னர் அந்தந்த நாட்டு மொழி, பண்பாடுகளால் விழுங்கப்பட்டவர்களாக இன்று வாழ்கின்றனர். இன்றைய இளம் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர். இந்திய அரசாங்கம் உலகில் உள்ள நான்கு நாடுகளில் (கயானா, சுரிநாம், பீஜி, மொரீசியஸ்) இந்திய பண்பாட்டு மையம் (Indian cultural centre) நிறுவி அதன் மூலம் இந்திமொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை பரப்பி வருகிறது. அதுபோல தமிழக அரசும் தமிழர்கள் அதிகமாக அந்நாடுகளில் வாழ்வதால் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்கிறார் விசுவநாதன். ஒட்டுமொத்த தமிழரின் விருப்பமும் இது என தமிழக அரசு உணரவேண்டும்.

தொகுப்பு : ப. திருநாவுக்கரசு

உதவிய நூல்கள் :

1. Tamil Emigration to Martinique - Fr. Thaninayagam.

2. பாரெல்லாம் பரந்த தமிழர் - ஈசா. விசுவநாதன்.

3. அயல்நாடுகளில் தமிழர் - நாகராஜன்


நன்றி: தமிழறிவு

சனி, 9 மார்ச், 2013

இரண்டாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பு!

தலைப்பில் "இரண்டாம்" என்ற சொல் வரும்போதே இதைப்போன்ற முதலாம் நிகழ்வு இருந்திருக்க வேண்டும் என்று யாவரும் எண்ணுவது சரியே. அது ஏறத்தாழ இரண்டாண்டுகள் பழைமையானது. முதலாம்  நிகழ்வைப் பற்றி விரிவாகப் பின்னர் காண்போம். தற்போதைய நிகழ்வைப் பதிவு செய்வதே நோக்கம்.

முதலாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பு முயற்சியில் 5 தமிழ் எழுத்துகளைக் கொண்டுபோய் கிரந்த-ஒருங்குறியிலும், முன்பின் பார்த்திராத 26 கிரந்த எழுத்துகளை தமிழ்-ஒருங்குறியிலும் கலந்து தமிழின் முகவரியை, அடையாளத்தைக் கணிப்பரப்பில் நீக்குவதற்காக தமிழ் அழிப்பாளர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது தமிழ்நாடு, தமிழ் கூறு நல்லுலகம் இவற்றொடு தமிழக அரசாங்கமும் திரண்டெழுந்து எதிர்த்ததால் தமிழ் அழிப்பாளர்கள் பின்வாங்கினார்கள்.

ஆயினும், விடாமுயற்சியாக, தற்போது, "ன, ழ" என்ற இரண்டு எழுத்துகளையாவது கிரந்த-ஒருங்குறியில் கொண்டுபோய்ச் சேர்த்து விட வேண்டும் என்று மீண்டும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தமிழ்-அழிப்பாளர்கள். முதலில் இவ் இரண்டைச் சேர்த்து விட்டால் பின்னர் ஒவ்வொன்றாக மீதி மூன்றையும் சேர்த்து விடலாம் என்பது அவர்களின் திட்டமாக இருக்கக் கூடும்.

முதலாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பில் (த.ஒ.அ) முன்களத்தில் இருந்து செயற்பட்ட அதே திரு.நா.கணேசன் அவர்களே இம்முறையும் முன்களத்தில் இருக்கிறார். ஆனால், ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பியிருக்கும் முன்னீடு (proposal) ஒரு மேனாட்டவரிடம் இருந்து போகுமாறு ஏற்பாடாகியிருக்கிறது இம்முறை.

திரு.மைக்கேல் எவர்சன் என்ற மேனாட்டவர் இவ் இரு தமிழ்
எழுத்துகளையும் கிரந்த-ஒருங்குறியில் கலக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்குக் கடந்த வருட இறுதியில் அனுப்பினார்.

அம் முன்னீட்டைப் பாராட்டி, ஆதரித்து, அக்கலப்பிற்குப் பரிந்துரையாக  திரு.நா.கணேசன் ஒரு மடலையும் சேர்த்தியத்திற்கு அனுப்பினார்.

முதலாம் த.ஒ.அ இற்கு ஆதரவு காட்டிய அறிஞர் பெருமக்கள் வரிசையில் இம்முறை திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களும் சேர்ந்தது மிகப்பெரும் அதிர்ச்சியாகவே தமிழுலகிற்கும் தமிழ்க் கணியிலகிற்கும்\
ஆகிப் போனது. மறவன்புலவாரும் இந்த "ன,ழ" எழுத்துகளை கிரந்த-ஒருங்குறியில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்து ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார் சேர்த்தியத்திற்கு. மிக வருந்தத் தக்க ஒன்றாகும்.

அதில் என்னதான் தேவை சொல்லப் பட்டிருக்கிறது என்று பார்க்கையில், நமக்கு வியப்பே மிகுகிறது. "தாய்லாந்து நாட்டில் உள்ள அரச வம்சத்தார் சிலருக்குத் தேவார திருவாசகத்தைக் கிரந்தத்தில் படிக்க ஆசையிருப்பதால்" தயவு செய்து கிரந்தத்தில் இவ் இரு எழுத்துகளையும் கலந்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

"எனது ஆங்கிலத்தில் "ழ" இல்லை. ஆனால் "ழ" வை வைத்துள்ள தமிழர்கள் தமிழைவிட ஆங்கிலத்தையே அதிகம் படிக்கிறார்கள். அதனால், ஆங்கில-ஒருங்குறியில் தமிழ்-ழ வைச் சேர்த்து விடுங்கள் என்று எந்த ஆங்கிலேயராவது சொல்வாரா?"

ஆனால் தமிழர் "அவர்களின் கிரந்தத்தில் இவ் எழுத்துகள் இல்லை - அதனால் எமது எழுத்துகளைக் கொண்டு போய் அங்கு சேருங்கள் - அங்கே இருக்கின்ற எழுத்துகளையெல்லாம் கொண்டு வந்து இங்கே வந்து சேருங்கள்" என்று சொல்கிறார்கள். தமது மொழியைச் சிதைக்கும் நுண்ணிய கூறுகளை தலைமேற் சுமந்து செய்கிறார்கள்.

முதலாம் த.ஒ.அவின் போது, திரு.நாகசாமி, திரு.செ.இராசு, திரு.இ.அண்ணாமலை ஆகிய அறிஞர்கள் திரு.கணேசனின் முன்னீட்டிற்குப் பின் ஆதரவு அளித்துச் சேர்த்தியத்திற்கு அனுப்பியிருந்தார்கள். திரு.கணேசன்
இம்முறை சேர்த்தியத்திற்கு எழுதிய கடிதத்தில் அவர்களை மறக்காமல் நினைவு கூர்ந்ததொடு திரு.சச்சிதானந்தன் அவர்களையும் பின் ஆதரவில் சேர்த்திருக்கிறார்.

இவர்களின் முன்னீடுகள், பரிந்துரைகளைப் பார்த்த தமிழுலகம் வருந்தத்தான் செய்தது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் நக்கீரன் அவர்கள் இம்முயற்சியை எதிர்த்து சேர்த்தியத்திற்குக் கடிதம் எழுதினார்.
அமெரிக்கத் தமிழறிஞர் சு.பழனியப்பன் மிக வலுவான ஆய்வுக் கட்டுரை எழுதி, இவ் எழுத்துகளைக் கலப்பதற்கு எதிர்ப்பு கூறி சேர்த்தியத்திற்கு அனுப்பினார். கோவை தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் சாந்தலிங்கம் மறுப்பினையம் பொருத்தமற்ற முன்னீடு என்பதையும் கூறி கடிதம் எழுதினார். இது எவ்வளவு தேவையற்ற விதயம் என்றும், இதனால் நலமில்லை என்றும் கூறி திரு.இரமணசர்மா சேர்த்தியத்திற்கு விளக்கி எழுதினார். திரு.நூ.த.உலோகசுந்தரம் அவர்களும் தனது மறுப்பினை மிக வலுவாக சேர்த்தியத்தில் பதிவு செய்தார். இவர்களின் எதிர்ப்பினால், சனவரி-பிப்ரவரியில் கூடிய சேர்த்தியம் இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தள்ளி வைத்திருக்கிறது. மீண்டும் சேர்த்தியம் கூடும்போது (ஓரிரு மாதங்களில்) இது குறித்து முடிவெடுக்கக் கூடும்.

இது இரண்டாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பின் தற்போதைய நிலை.

முதலாம் நிகழ்வின் போது எழுந்த அதே கேள்விகள் இன்றும் அப்படியே இருக்கின்றன.

1) பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு, உலகில் யார் வேண்டுமானாலும் தமிழ் எழுத்துகளை என்ன செய்ய வேண்டும் என்று எழுதி தமிழைக் குலைத்துவிட முடியும் என்ற நிலை இருக்கிறது.
அது தமிழர் என்ற பெயரில் இருக்கும் தனி மனிதரோ அல்லது ஓர் அமைப்போ
எதை வேண்டுமானாலும் மாற்றச் சொல்லி, திணிக்கச் சொல்லிக் கேட்கலாம்.
யாரும் மறுக்க வில்லை என்றால் சேர்த்தியமும் அதற்கு உடன்பட்டுப் போய்விடும். ஆர்வலர்கள் கொஞ்சம் தவறவிட்டாலும் தமிழ் தொடர்பான தவறான முன்னீடுகள் கணிமை, இணைய வரலாற்றில் நிரந்தரமாகச் சேர்ந்துவிடும். இந்த நிலையில், தமிழக அரசாங்கத்திற்குத் தெரியாமல் எந்த ஒரு தமிழ் சார்ந்த ஒருங்குறி முன்னீட்டையும் சேர்த்தியம் ஏற்கக் கூடாது என்று ஏன் நாம் இன்னும் நிலைப்பாடு எடுக்கவில்லை?

2) தமிழ் மக்களால் பயன்படுத்தப்படும் கணியில் யாரோ எங்கோ அமர்ந்து கொண்டு இதைத் தூக்கி அங்கே போடு, அதைத் தூக்கி இங்கே போடு என்று சொல்வதும் உடனே தமிழறிஞர்கள் அவர்களுக்கு மறுப்பு சொல்லியே காலம் கழிப்பதும் எத்தனை நாளைக்கு ஆகக்கூடும்?

தவறான முன்னீடுகளைச் செய்து தமது சொந்த நலத்திற்காக மட்டும் ஒரு தமிழர் தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் விளையாட முடியும் என்றால் இது எங்கே போய் முடியும்? இதற்கு முற்றுப் புள்ளியை யார் வைப்பது? எங்கு வைப்பது?

தமிழ் மொழியைச் சீரழிக்கும் போக்குக்கு உடன்போகிறவர்களை எப்படித் தமிழுலகம் தொடர்ந்து ஏற்றுக் கொள்கிறது?

தமிழக அரசாங்கத்தை விட, தமிழறிஞர்களை விட, பழுத்த தமிழ் மன்றங்களை விட, பல்வேறு தமிழக அரசின் தமிழ்த் துறைகளை விட சில தனியர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்களா? அவர்களால் பல கோடி மக்களின் எழுத்துகளின் தலைஎழுத்து தீர்மானிக்கப் படுமா?

தொடர்ந்து வரும் இச்சரவலுக்குத் தீர்வென்ன? எத்தனை நாள் மாரடிக்கப் போகிறோம் இவற்றோடு?


நண்பர்களே, இது இன்றைய, இந்நேரத் தமிழழிப்பாகும். விழித்துக் கொள்ளுங்கள் - அறிவுக் கூர்மையுடன் செயல்படுங்கள் - இல்லாவிட்டால் அழிந்தே போங்கள்! என்று மட்டுமே விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

நன்றி :
http://nayanam.blogspot.in/2013/03/blog-post.html
http://thiru2050.blogspot.in/2013/03/blog-post_2424.html

திங்கள், 25 பிப்ரவரி, 2013

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்


ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!
தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது. “உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.
இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக “தமிழ் மொழி “தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே “கிரெம்ளின் மாளிகை” என தமிழில் எழுதினோம்” என்று கூறுகிறார்கள்.
வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ’தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்’.
சிந்தியுங்கள்……..தமிழர்களே…..!


நன்றி : southnorthpole.mullimalar.in